மானாமதுரையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில், குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கலைப் பயணம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில், குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கலைப் பயணம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை மனிதம் அறக்கட்டளை, மாவட்ட சைல்டு-லைன் துணை மையம், மதுரை சக்தி விடியல் குழந்தைகள் உரிமைகள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த கலைப் பயணம் நடத்தப்படுகிறது.
இக் கலைப்பயணத்தின்போது, சக்தி விடியல் குழந்தைகள் உரிமை இயக்க கலைக் குழுவைச் சேர்ந்த கலைஞர்கள், குழந்தைகள் உரிமைகள் குறித்து வீதி நாடகங்கள், ஒயிலாட்டம், பறையாட்டம், மாட்டுக்கொம்பு ஆட்டம், குழந்தை உரிமைப் பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம், குழந்தைகள் உரிமை, பாலியல் குற்றங்கள், குழந்தைத் திருமணம், ஆதரவற்ற மற்றும் காணாமல்போன குழந்தைகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பு, பராமரிப்புக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து தகவல் தெரிவிக்க சைல்டு-லைன் 1098 குறித்து தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
கலைப் பயணத் தொடக்க விழாவுக்கு, மதுரை குழந்தைகள் நல பாதுக்காப்புக் குழுத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். மனிதம் அறக்கட்டளை இயக்குநர் வனராஜன், கலைப் பயணத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், சைல்டு-லைன் அணி தலைவர் ரசீந்திரக்குமார், உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், கண்ணாயிரம், சாந்தி, சுரேஷ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலர் தேவதாஸ், தலைமையாசிரியர் சிவகுருநாதன், ஒன்றியக் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராமதிலகம் மற்றும் மனிதம் குழந்தைகள் வள மையத்தின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.