குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கோரவலசை கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரும்படி கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கோரவலசை கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரும்படி கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் க. லதாவிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்: காளையார்கோவில் வட்டம், மாரந்தை ஊராட்சிக்குள்பட்டது கோரவலசை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி பழுதடைந்து சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், கிராமப் பொதுமக்கள் அனைவரும் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று, அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது கிராமத்துக்கு புதிதாக மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.