"கோமாரி நோய் தடுப்பூசி போடுவதால் கால்நடைகளுக்கு பாதிப்பு இருக்காது'
கோமாரி நோய் தடுப்பூசி போடுவதால் கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சிவகங்கை மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர்(பொறுப்பு) ஜெ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோமாரி நோய் தடுப்பூசி போடுவதால் கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சிவகங்கை மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர்(பொறுப்பு) ஜெ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை அருகே தனக்காவயல் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோயினை தடுக்கும் வகையில் தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமினை சிவகங்கை மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர்(பொறுப்பு) ஜெ.நவநீதகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசியது: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கொண்ட 66 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மூலம் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்தியும், பொதுமக்களிடையே நேரடியாகச் சென்றும் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட இயலாத கால்நடை வளர்ப்போர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும், சாதாராண கால்நடைகள் மட்டுமின்றி,கருவுற்ற கால்நடைகள்,பால் வழங்கும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தனக்காவயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்புக்கான தடுப்பூசி போடப்பட்டது. இதில், கால்நடை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.