மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினரிடம் ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.திமுக பிரமுகரிடம் ரூ.4 லட்சத்தை கைப்பற்றினர்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், இளையான்குடி அருகே உள்ள முடவேலி கிராமத்தில் திமுக பிரமுகர் வினோத் என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் எதுவும் கிடைக்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இதே பகுதியில் உள்ள கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சண்முகம் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், உரிய ஆவணமின்றி இருந்த ரூ. 4 லட்சத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருப்புவனம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வெளியூர் அதிமுக பிரமுகர் தங்கியிருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வருமான வரித்துறையினர் அந்த விடுதிக்குச் சென்று அதிமுக பிரமுகர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டனர். இதில் எதுவும் சிக்காததால் வருமானவரித்துறையினர் திரும்பிச் சென்றனர்.
மானாமதுரையில் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அமமுக, அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனை செய்ய ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்ற வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் அந்த வீடுகள் வரை சென்றுவிட்டு சோதனை நடத்தாமல் திரும்பினர்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பறக்கும்படையினர் அங்கு சென்று ரூ. ஒரு லட்சத்தை கைப்பற்றினர்.