சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில்வே கடவுப்பாதையை அகற்றாமல் இப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்துவதாக, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சனிக்கிழமை உறுதி அளித்தார்.
மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் சாலையில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ரயில்வே கடவுப்பாதையை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மானாமதுரை பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இந்த ரயில்வே கடவுப்பாதையை மூடக்கூடாது எனக்கோரி தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு ஏற்கெனவே மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த முன்னாள் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து கார்த்தி சிதம்பரம் சென்றார். வழியில் மானாமதுரையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் முன் உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு சால்வைகள் அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து அவர், ரயில்வே கடவுப்பாதையை மூடாமல் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கவும் இப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவும் ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வராஜ், மானாமதுரை நகர் காங்கிரஸ் தலைவர் கணேசன், முன்னாள் நிர்வாகிகள் சஞ்சய்காந்தி, ராமு, வழக்குரைஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.