கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வை மேலும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள் என்று, அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட பாஜகவின் தேச ஒற்றுமைப் பிரசார இயக்கம் சார்பில், ஒரே நாடு ஒரே சட்டம், 370, 35-ஏ சட்டப்பிரிவு நீக்கம் குறித்த மக்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா சிறப்புரையாற்றினார். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் என். சொக்கலிங்கம், மாவட்டப் பொதுச் செயலர் செல்வராஜ், கோட்டப் பொறுப்பாளர் சண்முகராஜா, பாஜகவின் ஒரே நாடு ஒரே சட்டம் பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன் ஆகியோரும் பேசினர்.
இதில், சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
பின்னர், ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு மூலம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்த
திராவிட மக்களை, கைபர்-போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் என கால்டுவெல் பாதிரியார் தெரிவித்த ஆரிய, திராவிடர் கட்டுக்கதை தகர்த்தெறியப்பட்டுள்ளது.
ஆரியர், திராவிடர் வாதத்தை நாம் ஏற்கவில்லை என்று அம்பேத்கரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
கீழடியில் குறைந்தது 33 அடி ஆழமாவது அகழாய்வு நடத்தவேண்டும். கீழடி அகழாய்வை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோளாகும். மத்திய-மாநில அரசுகள் கீழடி அகழாய்வை விரிவாக நடத்தும் என்றார்.