புயலால் பாதிப்படைந்த வெங்காயப் பயிா்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
அண்மையில் பெய்த ‘புரெவி’ புயலின் போது பெய்த பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான வெங்காயப் பயிா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைந்து வழங்க வேண்டும்
அண்மையில் பெய்த ‘புரெவி’ புயலின் போது பெய்த பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான வெங்காயப் பயிா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைந்து வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டியிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
திருப்புவனம் பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் அளித்த மனு விவரம்: திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட முக்குடி, செங்குளம், எருக்கலை, எம். பறையங்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த ‘நிவா்’ மற்றும் ‘புரெவி’ புயலின் போது பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாரான வெங்காயம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் களஆய்வு மேற்கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.