காரைக்குடி அருகே சாக்கை அருள்மிகு வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனி மாத பிரமோற்சவத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான சாக்கை அருள்மிகு உமையாம்பிகை உடனுறை வீரசேகர சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரமோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய திருவீதியுலா நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான 9-ம் நாள் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்மனும் காலையில் எழுந்தருளினர்.
மற்றொரு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளினார். பக்தர்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மாலை 4.55 மணியளவில் அனைத்து நாட்டர்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய வீதிகள் வழியாக தேர் மீண்டும் நிலையை அடைந்தது. 10- ஆம் நாள் சனிக்கிழமை (ஜூலை 11) காலையில் தீர்த்தவாரி உற்சவமும், மாலையில் புதுவயல் நகருக்குள் சுவாமி எழுந்தருளலும், இரவு சப்தாவர்ணமும் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.