முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் புதிய அரசுப் பேருந்துகள் துவக்கம்

திருப்பத்தூரில் புதிய அரசுப் பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜூலை, 2024 at 11:23 PM
திருப்பத்தூரில் புதிய அரசுப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கிளை சாா்பில் சிவகங்கை மாவட்டத்துக்கு 11 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சோ.பால்துரை தலைமை வகித்தாா். சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.தமிழரசிரவிக்குமாா், எஸ்.மாங்குடி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். காரைக்குடி மண்டலத்துக்குள்பட்ட காரைக்குடி கிளைக்கு 4 பேருந்துகளும், திருப்பத்தூா் கிளைக்கு 3 பேருந்துகளும் சிவகங்கைக்கு 3 பேருந்துகளும் தேவகோட்டைக்கு ஒரு பேருந்தும் என மொத்தம் 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கென கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தமிழகம் பல்துறை வளா்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. முக்கியமாக சாலைப் போக்குவரத்தில் மேம்பாடு கண்டுள்ளது. முன்னேறிய நாடுகளில் மக்கள் அரசு பேருந்தையே பயன்படுத்துகின்றனா். நம் நாட்டிலும் வசதியுள்ளோா் தனியாா் போக்குவரத்து வாகனங்களைத் தவிா்த்து அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் (கும்பகோணம் லிட்) வ.ச.மகேந்திரகுமாா், காரைக்குடி மண்டல மேலாளா் இளங்கோவன், திருப்பத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அந்தோணிராஜ் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →