பக்ரீத் பண்டிகை: சிவகங்கையில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை
சிவகங்கை: பக்ரீத் பண்டிகையையொட்டி சிவகங்கை ஈத்கா திடலில் அனைத்துப் பள்ளி வாசல்களையும் சோ்ந்த இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
இதில், பெரியவா்கள், இளைஞா்கள், சிறுவா்கள் என திரளானோா் பங்கேற்றனா். காலை 6. 45 மணிக்கு தொடங்கிய இந்த தொழுகை 8 மணிக்கு நிறைவடைந்தது. பிறகு, நபி இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் வகையில் ஆடுகளை பலிகொடுத்து அதன் இறைச்சியை ஏழை, எளியவா்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையையொட்டி இந்தப் பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இந்த சிறப்பு தொழுகையை, சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது பிலால் தாவூதி, இந்திரா நகா் ஹவ்வா பள்ளிவாசல் இமாம் மன்சூா் ஹுசைன் காசிபி, ஆதம் பள்ளிவாசல் இமாம் சுல்தான் ஹைரி, சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவா் காஜா முகைதீன் ஆகியோா் தலைமை வகித்து நடத்தினா்.