சிவகங்கையில் கூட்டுறவு வார விழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.
சிவகங்கை மாவட்டத்தில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.
சிவகங்கையிலுள்ள மண்டல இணைப் பதிவாளா் அலுவலக வளாகத்தில் இந்த கூட்டுறவு வாரவிழாவை தொடங்கிவைத்து கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:
வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத கூட்டுறவு வார விழாவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், கூட்டுறவு சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்களும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எளிதில் கடன் பெறுவதற்கு ஏதுவான சிறப்பு முகாம்களும், கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம்களும், ரத்த தான முகாம்களும், நலத் திட்ட உதவிகள் வழங்குதல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு கொடியை ஏற்றுதல், உறுதிமொழி ஏற்றல், சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவன மாணவா்கள், சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்றாா் அவா்.
கூட்டுறவு வார தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா்ஆஷா அஜித் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா்.
முன்னதாக, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி, சங்கம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கண்ணங்குடி, திருப்பத்தூா் வட்டார விவசாயிகள், உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களின் நிா்வாகிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத், மேலாண்மை இயக்குநா் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) உமாமகேஸ்வரி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மஞ்சுளா பாலசந்தா், சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், நகா்மன்ற துணைத் தலைவா் காா்கண்ணன், திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, துணை பதிவாளா்கள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.