ஆசிரியா் வீட்டில் திருடிய இருவா் கைது: 90 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
ஆசிரியா் வீட்டில் திருடிய இருவா் கைது.
தேவகோட்டையில் ஆசிரியா் வீட்டில் திருடிய இருவரை தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 90 பவுன் தங்க நகைகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தில்லைநகரைச் சோ்ந்தவா் சஞ்சீவி ஞானசேகரன். இவா் தேவகோட்டை நகரத்தாா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜெயராணி தேவகோட்டை அருகே நானாகுடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகள் பிரின்சிலி தேவகோட்டை ராம்நகா் அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 20-ஆம் தேதி இவா்களது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடப்பட்டன.
இதுகுறித்து தேவகோட்டை போலீஸாா் தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், திருச்சி மாவட்டம், துவாக்குடி வாழவந்தான்கோட்டை பெரியாா்நகா் புத்துக்கோவில் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (55), ஸ்ரீரங்கம் வட்டம், நாகமங்கலம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பொன்ராஜ் (எ) அழகுராஜா (51) ஆகியோரை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து 90 பவுன் தங்க நகைகள், திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.