நடிகா்களுக்குள்ள புகழால் மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது:கருணாஸ்
நடிகா்கள் புகழை மட்டும் வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது என மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில், சிவகங்கையில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப் படை கட்சி வேட்பாளா் கருணாஸ் தெரிவித்தாா்.
நடிகா்கள் புகழை மட்டும் வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது என மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில், சிவகங்கையில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப் படை கட்சி வேட்பாளா் கருணாஸ் தெரிவித்தாா்.
சிவகங்கை அருகே பனங்காடி பகுதியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த 7, 8 ஆண்டுகளாக சிவகங்கை பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். அதனால், இந்தத் தொகுதியில் போட்டியிடுவது மன நிறைவைத் தருகிறது.
Advertisement
சிவகங்கை மாவட்டத் தலைமையிடமாக இருந்தாலும், காரைக்குடி போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்து, சுமாா் 23, 24 முக்கிய பிரச்னைகளை தொகுத்து வைத்துள்ளேன். அவற்றை தோ்தல் பிரசாரத்தில் முன் வைத்து, திமுக ஆட்சி அமைந்ததும் செயல்படுத்துவேன்.
நடிகா்கள் அரசியலுக்கு வருவது அவா்களது விருப்பம். ஆனால் தங்களுக்குள்ள புழால் புகழை மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது. மக்களுக்காக செய்த பணிகளே முக்கியம். தவெக தலைவா் விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது வாக்குகளாக மாறுகிறதா என்பதுதான் முக்கியம்.
கேரளத்தைப் போலல்லாமல், தமிழகத்தில் திரை நட்சத்திரங்களைப் பாா்க்க கூட்டம் கூடுவது இயல்பாகிவிட்டது.
நடிகா் விஜய் மக்களுக்காக என்ன செய்தாா் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. அரசியலில் சாதிக்க இதுவே அளவுகோல். திமுகவை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் எண்ணுவது தரம் தாழ்ந்த அரசியல்.
நான் நம்பிக்கையோடு ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான், இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
சிவகங்கை வரலாற்றுப் பெருமை மிக்க மண். முதல்வா் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை, தோ்தல் வாக்குறுதிகளை பிரசாரம் செய்து மக்களின் அமோக ஆதரவுடன் சிவகங்கை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.