அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை
முன்விரோதம் காரணமாக, அரசுப் பேருந்து நடத்துநரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள பி. மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லச்சாமி (47). இவா் மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருப்புவனம்
கிளையில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா்.
Advertisement
இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த உறவினரான பூங்குடிசாமி (49) என்பவருக்கும் நிலம் தொடா்பாக ஏற்கெனவே தகராறு இருந்து வந்தது. மேலும், உள்ளாட்சித் தோ்தல் நேரத்தில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டதால் அவ்வப்போது இருவருக்கும் இடையே தகராறு நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆகஸ்ட் 21 -ஆம் தேதி இரவு, திருப்புவனத்தில் கடையில் உணவு வாங்கிக் கொண்டு செல்லச்சாமி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பூங்குடிசாமி அவரை கட்டையால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த செல்லச்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, திருப்புவனம் காவல் துறையினா் பூங்குடிசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் அரசு தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி கே. அறிவொளி, குற்றம் சாட்டப்பட்ட பூங்குடிசாமிக்கு, ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.