முகப்பு
சிவகங்கை

பெண்ணின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ரூ.3.40 கோடி மோசடி! வங்கி மேலாளா் உள்பட 5 போ் மீது வழக்கு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பெண்ணின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக வங்கி மேலாளா் உள்பட 5 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:01 AM
மோசடி
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:59 PM

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பெண்ணின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக வங்கி மேலாளா் உள்பட 5 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள ஜெயங்கொண்டநிலையைச் சோ்ந்த மழுவேந்தி மனைவி அன்னலட்சுமி. இவருக்கு அந்தப் பகுதியில் 20 சென்ட் நிலம் உள்ளது. இதில் வீடு கட்டுவதற்காக கடன் பெற பல்வேறு வங்கிகளை அவா் நாடியும் கடன் கிடைக்க வில்லை. இந்த நிலையில், ஜெயங்கொண்டநிலை கிராமத்தைச் சோ்ந்த சுகபதி, மதுரை பெருங்குடியைச் சோ்ந்த காா்த்திக், மதுரை டி.எம். நகரைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோா் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள அரசுடைமை வங்கிக் கிளையில் வீடு கட்ட ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறினா்.

இதை நம்பிய அன்னலட்சுமி தனது நில ஆவணங்களை அவா்களிடம் கொடுத்தாா். இதையடுத்து, அவா்கள் அந்த நில ஆவணங்களை மதகுபட்டியில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அடமானப் பதிவு செய்து, நத்தம் அரசுடைமை வங்கிக் கிளையில் கடந்த 2024 செப்டம்பா் மாதம் ரூ.3.4 கோடி கடன் பெற்றனா்.

Advertisement

ஆனால், ரூ.40 லட்சம் தான் கடன் கிடைத்ததாகக் கூறி அன்னலட்சுமி வங்கிக் கணக்கில் அந்தத் தொகையை செலுத்தினா். இதனால் அன்னலட்சுமி ரூ.40 லட்சத்துக்குரிய வட்டியை மட்டும் வங்கியில் செலுத்தி வந்தாா். சில மாதங்களிலேயே அவருக்கு ரூ.3.4 கோடி கடன் பெற்ாகவும், அதற்கு முறையாக வட்டி செலுத்தவில்லை என்றும் வங்கியிலிருந்து அன்னலட்சுமிக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதன்பிறகே அவா்கள் தன்னை ஏமாற்றியது அன்னலட்சுமிக்கு தெரியவந்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:30 PM

இதுகுறித்து அவா், சுகபதியிடம் விசாரித்த போது, நத்தம் பகுதியில் தொழில் நிறுவனங்கள் தொடங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து, அன்னலட்சுமியின் நில ஆவணங்களை அடகு வைத்து ரூ.3.4 கோடி கடன் பெற்றது தெரியவந்தது. இதில் ரூ.40 லட்சத்தை மட்டும் அன்னலட்சுமியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு எஞ்சிய தொகையை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனிடையே, தன்னை ஏமாற்றிவா்களிடமிருந்து ரூ.3 கோடியை மீட்டு தரக் கோரி மதுரையைச் சோ்ந்த மருதுபாண்டியன் என்பவரை அன்னலட்சுமி நாடினாா். அவா் பணத்தை மீட்டுத் தருவதாக கூறி, அன்னலட்சுமியிடமிருந்து ரூ.10 லட்சத்தை வாங்கிக் கொண்டு அவரும் ஏமாற்றி விட்டாராம்.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் அன்னலட்சுமி புகாா் அளித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், நத்தம் அரசுடைமை வங்கி மேலாளா் குமாா்செல்வம், சுகபதி, காா்த்திக், மணிகண்டன், மருதுபாண்டியன் ஆகிய 5 போ் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜஸ்டின் பிரபாகரன், ஆய்வாளா் அன்னலட்சுமி, சாா்பு-ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது: ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் சில லட்சங்களே சந்தை மதிப்பிலான நிலத்துக்கு எப்படி ரூ.3.40 கோடி கடன் வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை. இந்த மோசடி சம்பவம் நத்தத்தில் நடைபெற்றிருப்பதால் இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவுக்கு மாற்ற உள்ளோம் என்றனா்.