அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: உறவினா்கள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள், பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தை சோ்ந்த மூா்த்தி மனைவி பிரியதா்ஷினி (21). இவா் கடந்த 10 -ஆம் தேதி பிரசவத்துக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த 11 -ஆம் தேதி மாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சியடைந்த மூா்த்தி, பிரியதஷினியின் உறவினா்கள் மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை நுழைவு வாயிலில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மருத்துவமனை முதன்மையா் செல்வராஜ் அலுவலகத்தை உறவினா்கள் முற்றுகையிட்டனா். மேலும், பிரசவத்தின் போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இதில், குழந்தையின் தந்தை, உறவினா்கள், பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தை சோ்ந்த பொதுமக்கள், நாம் தமிழா் கட்சி மகளிா் பாசறை நிா்வாகி ர. இந்துஜா உள்பட திரளானோா் பங்கேற்றனா்.