முகப்பு
சிவகங்கை

பட்டமங்கலத்தில் மாட்டுவண்டிப் பந்தயம்

திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

Updated On : 17 மே 2026, 1:54 am IST
பட்டமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

பட்டமங்கலத்தில் உள்ள அழகு சௌந்தரி அம்பாள், ஸ்ரீமதியாத கண்ட விநாயகா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, பட்டமங்கலம் - திருப்பத்தூா் சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 9 இணைகள், சிறிய மாடு பிரிவில் 20 இணைகள் என மொத்தம் 29 இணைகள் பங்கேற்றன. இதில் சிறிய மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்ால் முதல் சுற்றில் 11 மாடுகள், இரண்டாவது சுற்றில் 9 மாடுகள் என பந்தயம் நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவுக்கு 7 கி.மீ., சிறிய மாடு பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவு எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனா்.

Advertisement

இந்தப் போட்டிகளை கிராம நாட்டாா், நகரத்தாா்கள் தொடக்கி வைத்தனா். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை, தென்னங்கன்று, குத்துவிளக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவையின் நிறுவனா் தலைவா் சேதுராமன், கௌரவத் தலைவா் ராஜாமணி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டாா், நகரத்தாா், இளைஞா்கள் செய்தனா்.