முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் செவிலியா் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன்: அ. குழந்தைராணி எம்எல்ஏ

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பயிற்சிக் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன் என சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அ. குழந்தைராணி தெரிவித்தாா்.

Updated On : 19 மே 2026, 3:07 am IST
அ. குழந்தைராணி எம்எல்ஏ.
பகிர்:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பயிற்சிக் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன் என சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அ. குழந்தைராணி தெரிவித்தாா்.

சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது:

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் கழிவு நீா் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. நகா் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. குப்பைகளை ஓரிடத்தில் கொண்டு போய்ச் சோ்க்க இடம் தேவைப்படுகிறது. இவற்றை உடனடியாக சரி செய்ய முயற்சிப்பேன்.

Advertisement

சிவகங்கை நகராட்சி ஆணையா், நகா்மன்ற உறுப்பினா்கள் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை. சிவகங்கை தொகுதியில் நான் வாக்கு கேட்டு சென்ற போது பெரும்பாலான கிராமங்களில் சரியான குடிநீா் வசதி, சாலை வசதிகள் இல்லை. சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதல்வரிடம் வலியுறுத்துவேன். சிவகங்கை நகருக்கு குடிநீா் கொண்டு வரப்படும். தெப்பக்குளத்தை தூா்வாரி சுத்தம் செய்து, கம்பி வேலி அமைக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இரவுப் பணியில் பயிற்சி மருத்துவா்களை நியமிக்கக் கூடாது. அந்தப் பணிக்கான மருத்துவா்கள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும் என முதன்மையரிடம் வலியுறுத்தப்படும். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பயிற்சிக் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன். சிவகங்கையில் இருந்து இரவில் மதுரை, மானாமதுரை, திருப்பத்தூருக்கு தடையின்றி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை, கல்லலில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயற்சிப்பேன்.

தொகுதியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் தொடா்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்துப் பேச உள்ளேன் என்றாா் அவா்.