தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 51 பவுன் நகைகளை சனிக்கிழமை இரவு மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
ஆண்டிபட்டி அருகே க.விலக்கு ,பிஸ்மி நகரில் வசித்து வருபவர் சந்திரமோகன் (44). இவர் சனிக்கிழமை இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு, தனது மனைவியுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின் புறம் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறிந்து சந்திரமோகன் க.விலக்கு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் சோதனை நடத்தினர்.