காசோலை மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை: போடி நீதிமன்றம் தீர்ப்பு
காசோலை மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து போடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
காசோலை மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து போடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் அய்யப்பன் (52). இவரிடம், இவரது உறவினரான தேவாரம் அரண்மனை தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் சித்திவிநாயகம் (41) ரூ. 4 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். மேற்படி கடனை செலுத்தும் வகையில், கடந்த 2015 ஏப்ரல் மாதம் தேவாரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கில் உள்ள காசோலையை சித்திவிநாயகம் கொடுத்துள்ளார். அய்யப்பன் காசோலையை செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பிவிட்டது. இதையடுத்து, சித்திவிநாயகம் மீது போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அய்யப்பன் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர். மணிவாசகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சித்திவிநாயகம் காசோலை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் காசோலை தொகை ரூ. 4 லட்சத்தை அய்யப்பனுக்கு வழங்க தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.