போடியில் ஆலங்கட்டி மழை: சுவர் இடிந்து தம்பதி காயம்
போடியில் திங்கள் கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழையால் வெள்ளம் வீடு, கடைகளுக்குள் புகுந்தது. போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
போடியில் திங்கள் கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழையால் வெள்ளம் வீடு, கடைகளுக்குள் புகுந்தது. போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
போடியில் திங்கள் கிழமை மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தற்போது சாலை உயர்த்தி அமைக்கப்பட்டதால் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதேபோல் போடி நகர் காமராஜர் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் காவல் நிலையம் அருகே தனியார் வணிக வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் தரை தளத்தில் இருந்த கடைகளில் பொருட்கள், வர்த்தக இயந்திரங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
போடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. போடி அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்து ஒன்று பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து பயணிகள் அப்பகுதியிலேயே இறக்கி விடப்பட்டனர்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டி 1 ஆவது வார்டில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பாலு என்பவரும், அவரது மனைவி பொட்டியம்மாள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.