முகப்பு
தேனி

அடிப்படை வசதிகள் கோரி துணை முதல்வரிடம் பொதுமக்கள் முறையீடு

பெரியகுளம் ஒன்றியம், கைலாசபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர்

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:37 am IST
பகிர்:

பெரியகுளம் ஒன்றியம், கைலாசபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள், அவ்வழியே காரில் சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் தங்களது குறைகளை முறையிட்டனர்.
கைலாசபட்டி, பூவை மூர்த்தியார் நகரில் 120 குடும்பங்கள் உள்ளன. இங்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் குடிநீர்த் தொட்டி, சாலை, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் சின்னச்சாமி தலைமையில் பொதுமக்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே காரில் சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு, அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முறையிட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் கூறினார். அதன்பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.