தேனி மாவட்டம், சின்னமனூரில் உரிய பாதுகாப்பின்றி மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிகப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த சுருளிவேல் மகன் கோட்டைச்சாமி (25). இவர், சின்னமனூர் நகராட்சியிலுள்ள தெருவிளக்குளை பழுது நீக்கும் ஒப்பந்ததாரரிடம் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சின்னமனூர் கருங்கட்டான்குளம் பள்ளிவாசல் தெருவிலுள்ள மின்விளக்கு எரியவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அங்கு சென்றுள்ளார். அங்குள்ள மின்கம்பத்தில் கோட்டைச்சாமி கையுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றியும், மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பை துன்டிக்காமலும் பழுது நீக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில், கோட்டைச்சாமி உடல் கருகி மின்கம்பத்திலேயே தொங்கினார். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.