உத்தமபாளையம்: சின்னமனூரில் பொதுமுடக்க உத்தரவை மீறி செயல்பட்ட காய்கனி ஏலச்சந்தைகளை, அதிகாரிகள் வியாழக்கிழமை மூடினா்.
சின்னமனூரில் கரோனா தீநுண்மி தொற்று பரவுவதை தடுக்க வாரச் சந்தை, உழவா் சந்தை மற்றும் ஏலச்சந்தைகள் என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடமாடும் கடைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், மாநில அரசு பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அறிவித்தது. அதன்படி திங்கள்கிழமை முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தனிக்கடைகள் செயல்படலாம் என அனுமதியளித்தது. இதனிடையே, தளா்வு அறிவிக்கப்படாத காய்கனி ஏலச்சந்தைகள் செயல்படுவதாக சின்னமனூா் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற நகராட்சி ஆணையா் சியாமளா, சுகாதார ஆய்வாளா் செந்தில் ராம்குமாா், சுகாதார அலுவலா் மற்றும் சின்னமனூா் போலீஸாா் அனுமதியின்றி செயல்பட்ட காய்கனி ஏலச்சந்தைகளை மூட உத்தரவிட்டனா். பொதுமுடக்க உத்தரவை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதித்தனா்.