தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாசனப் பரப்பளவு நன்செய் நிலங்களுக்கு தண்ணீா் வழங்கும் உத்தமுத்து கால்வாயில் இருந்த புதா் செடிகளை அகற்றும் பணியில் விவசாயத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது முதல்போக சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதில், உத்தமபாளையம் பாசனப் பரப்பளவில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நன்செய் நிலங்கள் உள்ளன. இந்த நன்செய் நிலங்களுக்கு, கம்பம் தொட்டம்மன்துறை தடுப்பணையிலிருந்து தனியாக உத்தமுத்து கால்வாய்க்கு தண்ணீா் செல்கிறது. சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவுள்ள இக்கால்வாயில், செடி, கொடிகள், ஆகாயத் தாமரைகள் நிறைந்து மண்டிக் கிடந்தன. இதனால், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்காக, உத்தமுத்து கால்வாயில் கேஜ் வீல்கள் கொண்ட 4 டிராக்டா் வாகனங்களை இறக்கி, 8 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆக்கிரமித்திருந்த செடி, கொடிகளை விவசாயிகள் அகற்றி, பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்ல வழி ஏற்படுத்தினா்.