விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரின் கலக்கப்பட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 450 ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரில் சரியான அளவுக்கு அவ்வப்போது குளோரின் கலக்கப்பட வேண்டும். மேலும், தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், காய்ச்சல் மற்றும் நோய் பரவாமல் தடுக்க ஆகஸ்ட் 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் அனைத்து குடிநீர்த் தொட்டிகளிலும் குளோரின் கலக்கப்படுகிறது. எனவே, இதற்கு அனைத்துப் பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், குளோரினேசன் செய்யப்படாத குடிநீர்த் தொட்டி குறித்து கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதன்மூலம், காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.