அரசுப் பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்தக் கோரிக்கை
ராஜபாளையம் வழியாக இயங்கும் அரசுப் பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் வழியாக இயங்கும் அரசுப் பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் வழித்தடத்தில், ஒன் டூ ஒன், சிட்டி எக்ஸ்பிரஸ், பைபாஸ் ரைடர் என பல்வேறு பெயர்களில் அரசு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு பேருந்துகளிலும் ஒரே தொலைவுக்கு பல்வேறு விகிதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
அதே போல் நகரப் பேருந்துகளில் சாதாரணம், எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் என வகைப்படுத்தி, 2 கி.மீ., க்கு ஒரு ஸ்டேஜ் வீதம் 40 கி.மீ., க்கு 20 ஸ்டேஜ் வரை நிர்ணயித்து இயக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண பேருந்துகளில் 40 கி.மீ., க்கு ரூ. 19, எல்.எஸ்.எஸ்.,சில் ரூ.20, எக்ஸ்பிரசில் ரூ.28 வசூலிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் எந்த ஒரு நகரப் பேருந்து வழித்தடமும் 35 கி.மீ., மேல் இல்லாத நிலையில், 25 கி.மீ.,க்கு ரூ. 17, ரூ. 19. ரூ.22 என வசூலிக்கின்றனர்.
புறநகர் பேருந்துகளை பொறுத்தவரை,சாதாரண பேருந்துகளை இயக்கி, விரைவுப் பேருந்துக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஏற்கெனவே கட்டண அதிகரிப்பால் அவதிப்பட்டு வரும் பொது மக்கள்தற்போது விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் பேருந்துகளைப் புறக்கணித்து ரயில்களை நாடுகின்றனர். எனவே அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட முறையான கட்டணங்களை வசூலிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.