சாத்தூரில் வெள்ளிக்கிழமை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூரில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (40). இவர் சாத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சாந்தி வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சாத்தூர் நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சாத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதே போன்று சிவகாசி நகர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியன் (50). இவரது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது.
மேலும் திருப்பதி நகரில் வசிப்பவர் கண்ணன் (45). இவர் சாத்தூர் பிரதான சாலையில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காவல் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்றது.
இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.