அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி மற்றும் சின்னசெட்டிக்குறிச்சி இடையிலான குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி மற்றும் சின்னசெட்டிக்குறிச்சி கிராமங்களுக்கு இடையே பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலை மிகவும் குறுகலாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் இச்சாலை வழியாக பேருந்து, சரக்கு வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்தால், எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல இயலாத நிலை உள்ளது. மேலும் இச்சாலையை ஒட்டி சுமார் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் உள்ளது. இதனால் வழிவிடும் வாகனங்கள் பள்ளத்தில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
மேலும் ஏதேனும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அல்லது பழுதடைந்தால் எந்தவொரு வாகனமும் செல்லமுடியாது. கிராமங்களுக்கு பேருந்து வரும் நேரங்களில் மற்ற வாகனங்கள் மாற்றுப் பாதை வழியாக சுமார் 4 கி.மீ. தொலைவு வரை சுற்றிச் செல்ல வேண்டும்.
இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் எரிபொருள் இழப்பும் ஏற்படுகிறது. இதனால் இக்கிராமத்திலிருந்து விவசாய விளைபொருள்களைக் கொண்டு செல்வதில் அதிக சிரமம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே செட்டிக்குறிச்சி-சின்ன செட்டிக்குறிச்சி இடையிலான குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.