அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் 25 பவுன் நகை கொள்ளை
அருப்புக்கோட்டையில் வீடுபுகுந்து மூதாட்டியிடமிருந்து 25 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் வீடுபுகுந்து மூதாட்டியிடமிருந்து 25 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் கீழ வீட்டார் தெருவில் வசிப்பவர் பிள்ளையார் செட்டியார் என்பவரது மனைவி பொன்னம்மாள்(85). இவரது கணவர் சில ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டதால் தனது அண்ணன் மகள் ராஜலஷ்மியின் பராமரிப்பில் தனியே சிறு வீடுபிடித்து பொன்னம்மாள் வசித்து வருகிறாராம். ராஜலஷ்மி, பொன்னம்மாளுக்கு 3 வேளையும் நேரில் அவரது வீட்டிற்கு வந்து உணவளித்து வருகிறார்.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணிக்கு மூதாட்டி தனது வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீடுபுகுந்த யாரோ மர்ம ஆசாமிகள் மூதாட்டியின் கண்களையும், வாயையும் பொத்தி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், தங்க வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம்.
நகைகளைப் பறிகொடுத்த மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு ஓடிவருவதற்குள் மர்ம ஆசாமிகள் நகைகளுடன் தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து, அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மற்றும் நகர் காவல்ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.