முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இடி தாக்கி தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் கிராமத்தில் தந்தை, மகன் புதன்கிழமை பிற்பகல் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கி பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் கிராமத்தில் தந்தை, மகன் புதன்கிழமை பிற்பகல் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கி பலியாகினர்.

அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் செந்தூர் பாண்டியன்(56) மற்றும் இவரது மகன் ராஜேஸ்(27). இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இதனிடையே  தந்தை மகனான இருவரும் சேர்ந்து புதன்கிழமை காலையில் வழக்கம்போல ஆடுமேய்க்கச் சென்றனர். அக்கிராம அருகே உள்ள அருணாச்சலபுரம் கிராமத்தையொட்டிய  கண்மாயருகே இருவரும் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர்.

பிற்பகல் சுமார் 2.45 மணியில் தொடங்கி தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் தந்தை, மகன் இருவரும் ஒரு மரத்தின்கீழ் ஒதுங்கி நின்றுள்ளனர்.

ஆனால் சுமார் 4 மணியளவில் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் மரத்தின்கீழ் ஒதுங்கியிருந்த இருவரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டதாகத் தெரிகிறது. அருகில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் உதவிக்கு ஓடிவந்து பார்த்ததில் அவர்கள் இருவரும் பேச்சுமூச்சற்றுக் கிடந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல் துறையினர் அவசர மீட்பு வாகனம் மூலம் தந்தை மகன் ஆகிய இருவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவரது உடல்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர், இருவரது இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் சுக்கிலநத்தம் கிராமத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.