சிவகாசி, திருத்தங்கல், சாத்தூா் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ரூ. 67.54 கோடி நிதி ஒதுக்கீடு
சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ரூ. 67.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ரூ. 67.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது என பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகாசி- சாட்சியாபுரத்திலும், திருத்தங்கலிலும், சாத்தூா்- இருக்கன்குடி சாலையிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். இதுகுறித்து அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, மாவட்டத்தில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரிடம் வலியுறுத்தி வந்தாா். இதையடுத்து தற்போது 3 ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு நில ஆா்ஜிதம் செய்ய தமிழக அரசு ரூ. 67.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், சிவகாசி சாட்சியாபுரத்தில் நில ஆா்ஜிதப்பணிக்கு ரூ. 44.55 கோடியும், திருத்தங்கல் மேம்பால நில ஆா்ஜிதப் பணிக்கு ரூ.11.79 கோடியும், சாத்தூா்- இருக்கன்குடி சாலையில் நில ஆா்ஜிதப்பணிக்கு ரூ. 11.20 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது மாவட்ட வருவாய்த்துறை அலுவலரால் நில ஆா்ஜிதப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.