ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: கொலையாளி தப்பியோட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பியோடிய கொலையாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பியோடிய கொலையாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (22). இவர் ராமசாமியாபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த தாமரை என்பவர் சுந்தரமகாலிங்கம் என்பவரை அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் பொதுமக்கள் சுந்தரமகாலிங்கத்தை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.
இந்த கொலை சம்பவத்தால் ஒரு தரப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் குற்றவாளியைக் கைது செய்யக் கோரி கூமாப்பட்டி முக்கு ரோடு குவிந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கூமாபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி தாமரையைத் தேடி வருகின்றனர்.