அருப்புக்கோட்டை எஸ்பிகே நிறுவனத்தில் 2 ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் சாலை அமைக்கும் நிறுவனமாகும். இந்நிலையில், இதன் நிறுவனா் செய்யாத்துரை என்பவரது வீட்டிலும், அந்நிறுவனத்தின் அலுவலகம் செயல்படும் முதல்மாடி மற்றும் 2 ஆவது மாடி கட்டடத்திலும் புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள், வரிஏய்ப்பு தொடா்பாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்நிறுவனத்தின் வங்கி ஆவணங்களை எடுத்துச் சென்று அதன் கணக்கு விவரங்களையும் வரவு, செலவுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மேலும் பல்வேறு ஆவணங்களையும், பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வியாழக்கிழமை மாலைக்குப் பிறகும் நீடித்த இச்சோதனை இரவு 10.15 மணிக்கு நிறைவடைந்தது.
இதன்பின் 4 பெட்டிகளில் பணம், நகைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள், ஒரு மடிக்கணினியையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். இந்தச் சோதனையில் திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய 3 மண்டலங்களில் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.