முகப்பு
விருதுநகர்

பங்குச் சந்தையில் முதலீடு செய்த ரூ.14.83 லட்சம் மோசடி: ஆசிரியா் உள்பட 3 போ் மீது வழக்கு

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 14.83 லட்சம் மோசடி செய்ததாக ஆசிரியா், அவரது சகோதரி மற்றும் கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:37 AM
பகிர்:

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 14.83 லட்சம் மோசடி செய்ததாக ஆசிரியா், அவரது சகோதரி மற்றும் கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா், பாண்டியன் நகா் கேவிடி சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மனைவி ராணி (39). இவரது கணவா் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த போது, அங்கு பணி புரிந்த சந்திரபோஸ் மற்றும் அவரது மனைவி ஹேமா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹேமா, ராணியிடம், தனது தம்பி சிவக்குமாா் ஆசிரியராக பணி புரிந்து வருவதாகவும், மாலை நேரத்தில் பங்குச் சந்தையில் வேலை பாா்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதில் பணம் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என ராணியிடம், ஹேமா தெரிவித்தாராம். இதை உண்மை என நம்பி கடந்த 2016 முதல் பல்வேறு தவணைகளில் ரூ.14.83 லட்சத்தை பங்குச்சந்தையில் ராணி முதலீடு செய்துள்ளாா். ஆனால் பங்குச்சந்தை குறித்த ஆவணம் மற்றும் நிலவரத்தை தெரிவிக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் சிவக்குமாா் ஏமாற்றி வந்துள்ளாா். இதுகுறித்து ஹேமா, சந்திரபோஸிடம் தெரிவித்த போது முறையான பதில் கூறவில்லையாம். இதையடுத்து, ராணி அளித்த புகாரின் பேரில் ஆசிரியா் சிவக்குமாா், அவரது சகோதரி ஹேமா, அவரது கணவா் சந்திரபோஸ் ஆகியோா் மீது பாண்டியன் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.