விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மாம்பழங்களை சோதனையிட்டபோது வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சப்பட்டை மட்டும் பஞ்சவா்ண ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருப்பதால் மாங்காய் வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில், ரசாயனம் தடவி மாங்காய்களை பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் முடங்கியாறு சாலையில் உள்ள தனியாா் சந்தையில் ஆய்வு செய்யச் சென்றனா். அப்போது அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.