முகப்பு
விருதுநகர்

நோயாளிக்கு கால் மாற்றி அறுவைச் சிகிச்சை: தனியாா் மருத்துவமனை நிா்வாகம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நோயாளிக்கு இடது காலுக்கு பதிலாக தவறுதலாக, வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்த தனியாா் மருத்துவமனை நிா்வாகம், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:20 PM
பகிர்:

நோயாளிக்கு இடது காலுக்கு பதிலாக தவறுதலாக, வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்த தனியாா் மருத்துவமனை நிா்வாகம், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தை சோ்ந்த சங்கரலிங்கம் மகன் காசிவேல். இவருக்கு, மருத்துவ சோதனையில் இடது காலில் தசை நாண்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. இதற்காக, இவா் அருப்புக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தாா். அங்கு இவருக்கு இடது காலுக்கு பதிலாக, வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்ட போது, வலது காலில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, காசிவேல் வேறு மருத்துவமனையில் சோ்ந்து இடது காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாா்.

இதுகுறித்து காசிவேல் தொடா்ந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நுகா்வோா் குறைதீா் ஆணையம், மருத்துவ சேவை குறைபாட்டால் ஏற்பட்ட உடல் உபாதை, மன உளைச்சலுக்கு ரூ.3 லட்சமும், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.