நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுது
நாகப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.
நாகூா் மியாத் தெருவில் உள்ள நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளி 106- ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்க ஏதுவாக வாக்குச்சாவடி அலுவலா் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆன் செய்தாா். அப்போது இயந்திரம் ஏரா் என்று காட்டியது. பழுதை சரி செய்ய வாக்குச்சாவடி அலுவலா்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் வாக்குப்பதிவை தொடங்க முடியாமல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனா்.
இந்நிலையில், அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வயா்களை சரி செய்த பின், வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பட தொடங்கியது. இதனால் முக்கால்மணி நேரம் தாமதாக வாக்குப்பதிவு தொடங்கியது.
Advertisement
இதேபோல நாகை அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் 162- ஆவது வாக்குச்சாவடி மையம் உள்பட இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இயந்திரம் சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கு பின்னா் வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது.
திருமருகல் சேகல்பூத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதமானது. நாகை, நாகூா் உள்பட 4 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்காளா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.