காரைக்காலில் அக்.1-ஆம் தேதி வரையிலான இரு வார கால தூய்மை இயக்க சிறப்பு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை ஆட்சியர் ஆர்.கேசவன் தொடங்கிவைத்தார்.
தூய்மையே சேவை என்ற இரு வார கால சிறப்பு தூய்மை இயக்கம் காரைக்காலில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அக்.1-ஆம் தேதி வரை குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து, ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி சிறப்புப் பணியாக மேற்கொள்வதே இந்த இயக்கத்தின் நோக்கம். காமராஜர் திடலில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் பேசும்போது, காரைக்காலில் 10 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை கட்டிக்கொள்ள அரசு நிதி அளித்தாலும், கழிப்பறை கட்டுவதில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர்.
தூய்மையாக நகரை வைத்திருக்கும் வகையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தூய்மை குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது, காரைக்கால் வணிக நிறுவனங்கள் குப்பைகளை சேகரித்து வைக்கத் தேவையான நீல நிற பைகளை ஆட்சியர் வர்த்தக சங்கத்தினரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம், நகராட்சி ஆணையர் டி.சுதாகர், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் வி.ஆனந்தன், செயலர் ஜெ.சிவகணேஷ் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.