பாஜக பொறுப்பிலிருந்து மூவர் விடுவிப்பு
காரைக்கால் பாஜக பொறுப்பிலிருந்து 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர்.
காரைக்கால் பாஜக பொறுப்பிலிருந்து 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, கட்சியின் கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையால், பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் கணேஷ் விடுவிக்கப்படுகிறார். அவரிடம், கட்சி நிர்வாகிகள், கட்சி சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மகளிரணி மாவட்டத் தலைவி எம். மாரியம்மா என்கிற சாந்தி வெளியிட்ட அறிக்கையில், பாஜக நெடுங்காடு தொகுதி மகளிரணி தலைவி ஆனந்தி சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் புனிதவள்ளி ஆகிய இருவரும் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கொள்கைக்கு புறம்பாக செயல்பட்டதாலும் அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.