வட்டிக்குப் பணம் கொடுத்தவர் தற்கொலை வழக்கில் ஒருவர் கைது
காரைக்காலில் வட்டிக்குப் பணம் கொடுத்தவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒருவரை போலீஸார்
காரைக்காலில் வட்டிக்குப் பணம் கொடுத்தவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் உள்ளிட்ட முக்கிய எதிரிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இவரிடம் பணம் வாங்கியோர் உரிய முறையில் தொகையைத் திருப்பித் தராமல் இருந்துள்ளனர். இதுதொடர்பாக, சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு அவரை மிரட்டியுள்ளனர். மிரட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் செல்லிடப்பேசி பேச்சுகளின் பதிவுகளை குடும்பத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் செய்துவிட்டு, சுரேஷ் வீட்டினுள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
இவரது மனைவி, கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர் கணேஷ் மற்றும் ஆனந்தி சந்திரன் என்கிற பெண் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், மேற்கண்ட இருவரும்
தலைமறைவாகிவிட்டனர்.
இதற்கிடையே பாஜக இளைஞரணி பொறுப்பிலிருந்து கணேஷ் நீக்கப்பட்டார். இந்நிலையில், நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள மேலையூரைச் சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். சுரேஷிடம் இவரும் பல லட்சம் வாங்கிக்கொண்டு மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்த செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தனர். இவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபு, இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.