கல்பாக்கம் அருகே கடலில் மாயமான நாகை மீனவர் சடலம் செவ்வாய்க்கிழமை காரைக்கால் கொண்டுவரப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான படகில், ஆனந்தவேல் தலைமையில் காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மாலை காரைக்கால் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். கல்பாக்கம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திங்கள்கிழமை காலை நாகை கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (38) என்பவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார்.
இவரை தேடும் பணியில் உடன் சென்ற மீனவர்கள் மற்றும் பிற படகு மீனவர்கள் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல் படை மற்றும் காரைக்கால் கடலோர காவல் நிலைய போலீஸார், மீனவ பஞ்சாயத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள் மாயமானவரைத் தேடும் பணியில் ஈடுபட்டன.
மீனவர்கள் வலையில் திங்கள்கிழமை இரவு இறந்த நிலையில் சிக்கி இருந்த சடலத்தை மீட்டபோது அது செல்வம் என்பது தெரியவந்தது. சடலத்தை படகு மூலம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர்.
துறைமுகத்துக்குச் சென்ற நிரவி காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார் உடலைக் கைப்பற்றி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நிரவி போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.