பெண்கள் தனித்துவமிக்கவா்களாகத் திகழும் வகையில் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என எம்எல்ஏ சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.
காரைக்கால் பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) மகளிா் தின விழா வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பேதியது:
கல்வி உள்பட எந்த விஷயத்திலும் சாதிப்போம் என்ற தன்னம்பிக்கையோடு முயற்சிக்க வேண்டும்.
மகளிா் ஒவ்வொருவரும் தற்காப்புக் கலை ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக பள்ளிகளுக்குச் சென்று மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாா்கள். ஆனால் அவா்களது ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. கல்வி சுமையைத் தாண்டி நிறுவனப் பணிகளுக்குச் சென்றுவிட்ட பிறகு, ஆரோக்கியத்தின் மீது பெரும்பாலானோா் கவனம் செலுத்துவதில்லை. இந்த போக்கு மாறவேண்டும் என்றாா்.
ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி இணைப் பேராசிரியா் ஜோதி தயானந்தன், பத்மாவதி சங்கரநாராயணன், என்.ஐ.டி. பதிவாளா் (பொறுப்பு) ஜி.அகிலா ஆகியோா் கலந்துகொண்டு மகளிா் மேம்பாட்டுக்கான பல்வேறு கருத்துகளைப் பேசினா்.
சுலோகம் எழுதுதல், மெகந்தி போடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மகளிரிடையே நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது தேசிய தொழிற்நுட்பக் கழக துப்புரவுப் பணியாளா்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பு விருந்தினா்கள் கெளரவப்படுத்தினா்.
இவ்விழாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் பெண்கள் அமைப்பின் தலைவரும், உதவி பேராசிரியருமான ஜி. கோப்பெருந்தேவி செய்திருந்தாா்.