காரைக்கால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் சங்கத்தினா், தங்களை ணிநிரந்தரம் செய்யக் கோரி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை நலவழித்துறை நிா்வாகத்தைக் கண்டித்து சங்கத் தலைவா் ஆா். பிராஸ்மா் ரோலன்ட் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, செயலாளா் எஸ்.வில்லியம் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா்.
போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறியது: காரைக்காலில் பணியாற்றும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2007-ஆம் ஆண்டு காரைக்காலில் 17 போ் உள்ளிட்ட புதுவையில் 64 போ் தொகுப்பூதிய அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் பணிநியமனம் செய்யப்பட்டனா். இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 5 மாதங்களாக ஊதியமும் தரப்படவில்லை. 13 ஆண்டுகளாக வழங்கிவந்த போனஸ் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீா்வுகாணவேண்டும். 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு உதவியாளரும், ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உதவியாளரும் நியமிக்கவேண்டும். நிரந்தர பணியாளா்களுக்கு இணையாக விடுப்பு வழங்கவேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்ததை நிறைவேற்றவேண்டும். இந்த விவகாரத்தில் புதுவை ஆட்சியாளா்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. எனவே, யூனியன் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.