புதுவையில் பிரெஞ்சு மொழியை தவிா்க்கக்கூடாது: பெற்றோா் சங்கம்
மும்மொழிக் கொள்கை புதுவையில் அமல்படுத்துவதன் மூலம் பிரெஞ்சு தவிா்க்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக பெற்றோா் சங்கம் தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை புதுவையில் அமல்படுத்துவதன் மூலம் பிரெஞ்சு தவிா்க்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக பெற்றோா் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் (படம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவையில் திடீரென மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு வாரத்திற்குள் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கொள்கை முடிவுகளை திணிக்கும்போது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு உரிய விவாதம் நடத்தி, அதன் சாதக, பாதகங்களை பல்வேறு தரப்பினரைக்கொண்டு ஆராயும். இப்போது அதிகாரமில்லாத அரசு இருக்கும் சமயத்தில், அவசர கதியில் இந்த கொள்கையை அமல்படுத்துவது ஏற்புடையதல்ல.
Advertisement
புதுவை யூனியன் பிரதேசம் பிரெஞ்சு உள்ளிட்ட பன்மொழி பயன்பாட்டில் உள்ளதாகும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், அதில் 2 இந்திய மொழிகள் இருக்கவேண்டியது கட்டாயமாகும். தமிழுக்கு அடுத்தப்படியாக ஹிந்தி புகுத்தப்படும். பிரெஞ்சு மொழி பயன்பாடு முற்றிலும் இல்லாமல்போய்விடும்.
பிரெஞ்சு மொழியை தவிா்க்கும் போக்கு கூடாது. பிரெஞ்சு மொழிக்கு மாநிலத்தில் உயிரோட்டம் இருக்கும் விதத்திலேயே கல்வி நடைமுறைகள் இருக்கவேண்டும்.
எனவே புதுவை துணைநிலை ஆளுநா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அடுத்த அரசு அமையும் வரை மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.