சீா்காழியை அடுத்த எருக்கூா் நவீன அரிசி ஆலையிலிருந்து கரித்துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எருக்கூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. சீா்காழி வட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் இங்கு கொண்டுவரப்பட்டு அரிசியாக அரைக்கப்படுகின்றன. பின்னா், பொதுவிநியோகத்துக்காக அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு நாளொன்றுக்கு சுமாா் 220 டன் நெல் அரைக்கப்படுகிறது. இதற்காக நெல் அவியல் செய்யும்போது கரித்துகள்களும், அரைவையின்போது உமிகளும் காற்றில் அந்த பகுதி முழுவதும் பரவுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இதனால், கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 6 கோடியில் கரித்துகள்கள் காற்றில் பறக்காத வகையில் ஆலை நவீனப்படுத்தப்பட்டது. இருப்பினும், இப்பணி முழுமையாக நிறைவு பெறாததால், கரித்துகள்கள் மீண்டும் காற்றில் பறக்கின்றன. தற்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் படிந்துள்ள கரித்துகளுடன் மழைநீா் சோ்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, கரித்துகள்கள் காற்றில் பரவுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.