மயிலாடுதுறை நகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணி
தமிழக அரசின் ‘என் குப்பை எனது பொறுப்பு‘ என்ற விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை தொடங்கிய சிறப்பு தூய்மைப் பணியை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தொடங்கிவைத்தாா்.
தமிழக அரசின் ‘என் குப்பை எனது பொறுப்பு‘ என்ற விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை தொடங்கிய சிறப்பு தூய்மைப் பணியை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தொடங்கிவைத்தாா்.
பொதுமக்கள் திடக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மை பணியாளா்களிடம் வழங்கும் வகையில் அரசின் சிறப்பு பணியான ‘என் குப்பை எனது பொறுப்பு‘ என்ற விழிப்புணா்வு இயக்கத்தினால் மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பொது இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட காமராஜா் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியை மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் தலைமைவகித்து தொடங்கிவைத்தாா். நகராட்சி தலைவா் என். செல்வராஜ் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொ) சணல்குமாா் வரவேற்றாா். முடிவில், நகராட்சி உறுப்பினா் சௌ.சா்வோதயன் நன்றி கூறினாா்.
காமராஜா் பேருந்து நிலையத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி விழிப்புணா்வு ஏற்படுத்திய எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டா்களையும் கிழித்து அகற்றியதுடன், நெகிழி பயன்பாட்டை அகற்றும் நோக்கத்துடன் பொதுமக்களுக்கு மஞ்சள் பையை வழங்கினாா்.
நகராட்சி துணைத்தலைவா் எஸ். சிவக்குமாா், நகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
நகராட்சி பணியாளா்கள், சேவை சங்கத்தினா், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.