ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் மரணத்துக்கு உரிய நீதி வழங்கக் கோரி மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் தெ. மகேசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் வேலு. குபேந்திரன், தமிழர் உரிமை இயக்கம் அமைப்பாளர் சுப்பு. மகேசு, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் ஓ. ஷேக்அலாவுதீன், தமிழர் தேசிய முன்னணி நாகை மாவட்டத் தலைவர் இரா. முரளிதரன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் கண்ணன், மக்கள் அரசு கட்சி நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.