திருமருகல் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் சுமார் 50 சதவீத முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மூன்று நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்ய நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் உள்ளதால், உடனடியாக திருமருகல் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்குவந்த திட்டச்சேரி போலீஸார் மற்றும் நாகை வட்டாட்சியர் இளங்கோவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், நன்னிலம் - நாகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.