வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சீர்காழி பகுதியில் கேழ்வரகு கூழ் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோடை காலம் தொடங்கும் முன்னரே கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் இளநீர், நீர்மோர், கூழ் உள்ளிட்ட இயற்கை பானங்களை பருகி தாகத்தை தணித்துக்கொள்கின்றனர். தற்போது, வெளிநாட்டு குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற சிந்தனை ஓரளவு அதிகரித்து வருவதால், இயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னைமரங்கள் சாய்ந்துவிட்டதால் நிகழாண்டு இளநீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அதன் விலை குறைந்தது ரூ.20 மேலாக உள்ளது. இதன் காரணமாக, கேழ்வரகு, கம்பங்கூழ் விற்பனை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, தள்ளு வண்டிகளில் விற்பனை செய்யப்படும் கேழ்வரகு கூழை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிக் குடிக்கின்றனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கின்றனர். 1டம்பளர் கூழ் ரூ 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, சீர்காழி அடுத்த சூரக்காடு பகுதியில் கேழ்வரகு கூழ் விற்பனை செய்யும் பெண் கூறியது:
ஒரு கிலோ கேழ்வரகு, ஒரு கிலோ கம்பு ஆகியவற்றை முதல் நாள் வாங்கி ஊறவைத்து, அரைத்து மறுநாள் காலை கூழ் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவருகிறேன். ரூ. 1000 வரை கூழ் விற்பனை செய்தால், ரூ. 500 வரை லாபம் கிடைக்கும் என்றார்.